கதிரொளி

- அவினேனி பாஸ்கர்

20 ஏப்ரல் 2012

கம்பனின் கங்கைப் படலத்திலிருந்து ஒரு பாடல்...

கானகம் புகும் இராமன் கோசலநாடு கடந்து கங்கையை அடைகிறான், தம்பி இலக்குமனனோடும், மனைவி சீதையோடும் நடந்து செல்கிறான் அதை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள்!

வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்!

மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு!



விளக்கவுரை :
அய்யோ! இராமனின் மேனி அழகை என்ன சொல்வேன்! கருப்பு மையின் நிறமா? இல்லை மரகத வண்ணமா? நீலக்கடலின் நிறமா? மழைமேகத்தின் நிறமா? இவையெல்லாம் கலந்த அழியாத அழகு இவன் அழகு. கதிரவனின் ஒளிக்கதிர்கள் கூட இந்த சியாமளவண்ணனின் மேனியில் பட்டு மறைந்துவிட்டனவாம்!  உண்டா இல்லையா என்பது போன்ற இடையையுடைய சீதையோடும், தன் இளையவனான இலக்குவனனோடும் இராமன் காடுபுகுந்தான்!

மற்ற நிறங்களைப்போல் கருப்பு நிறம் ஒளியை பிரதிபலிக்காது என்கிற விஞ்ஞானக் குறிப்பை  கம்பன் எவ்வளவு அருமையாக ஏற்றினான் பாருங்கள்!